மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேலை வாய்ப்பு, தங்கும் இடம் தருவதாகக் கூறப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அப்பெண்கள் இரண்டு பேரும் கொடுத்திருந்த புகார்கள் ஒரே மாதிரி இருந்ததால் அக்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அம்ரீன், அஃப்ரீன் மற்றும் அவர்களது கூட்டாளி சந்தன் ஆகியோரைப் பிடித்துச் சென்று போலீஸார் விசாரித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் சமீப காலம் வரை இரண்டு சகோதரிகளும் குடிசைப்பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
ஆனால் சமீபத்தில் ஆடம்பர பங்களாவில் குடியேறியுள்ளனர். மேலும் இரண்டு பேரும் சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் இருக்கும் பெண்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறுவது வழக்கம். மாதம் ரூபாய் பத்து ஆயிரத்தில் வீட்டு வேலை பெற்றுத் தருவதாகவும், தங்குமிடம், உணவு இலவசம் என்றும், ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி, நம்பிக்கை ஏற்படுத்தி இருந்தனர்.
புகார் கொடுத்த இரு பெண்களையும் சகோதரிகள் இரண்டு பேரும் படிப்படியாக பார்ட்டி, பப்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர். அதோடு பணக்கார ஆண்களிடம் பழகும்படி கூறி இருக்கின்றனர். மேலும் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், பல சந்தர்ப்பங்களில் பாலியல் தாக்குதல் நடத்தியதாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்தவர்களில் சத்தீஷ்கரைச் சேர்ந்த ஒரு பெண் பியூட்டிஷியனாக இருக்கிறார்.
அவரை வேலை என்று கூறி அகமதாபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்ரீன் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தவிர அம்ரீன் கூட்டாளிகள் பிலால் மற்றும் சந்து ஆகியோரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.