இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர் – கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் பும்ரா, முதுகுவலியால் அவதியடைந்தார். இதனால், போட்டியிலிருந்து விலகிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், மற்றவீரர்களின் பங்களிப்பால் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அணி வீரர்களும் அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர்.
இதையும் படிக்க:புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது.
பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அவருக்கு ஓய்வு தேவையான ஒன்றாக இருக்கிறது என்று பிசிசிஐயின் பிசியோதெரபி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐபிஎல்லைத் தொடர்ந்து பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விளையாடவிருக்கிறார்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 10-வது இடத்தைப் பிடித்த மும்பை அணிக்கு, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவரைத் தவிர்த்து கேப்டன் ஹார்திக் பாண்டியா, டிரெண்ட் போல்ட், கார்பின் போஸ்ச், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் உள்ளனர்.
ஏப்ரல் 4 ஆம் தேதி லக்னௌவையும், ஏப்ரல் 7 ஆம் தேதி பெங்களூருவையும் மும்பை அணி எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தப் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், அவர் ஏப்ரல் முதல் வாரத்தில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!