கொங்கு கிராமத்திலிருக்கும் விவசாய உற்பத்தி முறை, அது சாதிய அமைப்பின் சுரண்டல் தன்மையோடு இயைந்து இயங்கும் முறை, சிறு சிறு விவசாயத் தொழில்கள், நித்தம் சுரண்டப்படும் அத்தொழிலாளர்கள், அவர்கள் வைத்திருக்கும் சிறு நிலம், அவற்றைப் பறிக்கும் அரசியல், உழைப்பவர்களுக்கு இறை நம்பிக்கையும், கோயிலும் இருந்தாலும் அதன் மீதான முழு சுதந்திரமும் அவர்களுக்கு இல்லாமல் இருப்பது எனப் பல சமூக மடிப்புகளை, நுணுக்கமாக எல்லாக் காட்சிகளிலும் பேசியபடியே நகர்கிறது திரைக்கதை. அவை துருத்தாமல் மையக் கதையோடு ஒன்றியிருப்பது படத்தின் பலம்.
நல்லபாடனின் மகன் காதலிக்கும் பண்ணாடி வீட்டுப் பெண், நல்லபாடனின் வீட்டிற்கு வந்து நிற்கும் காட்சி, வசனங்களே இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் முறை அதன் வீரியத்தை இன்னும் ஆழமாக்குகிறது.

இவ்வாறாகப் பல காட்சிகள் அவற்றுக்கான வீரியத்தைக் கடத்தியிருந்தாலும் மொத்தமாகவே திரைமொழியாக இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். ஆங்காங்கே விலகியோடும் திரைக்கதையும் அயற்சியைக் கொடுக்கிறது.
கதையின் நாயகர் நல்லபாடனின் கவலையும் பிரச்னைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட போதிலும், மீண்டும் மீண்டும் அவற்றைப் பேசியபடியே சில காட்சிகளைச் சுழலவிட்டதும் அந்த அயற்சியை அதிகப்படுத்துகிறது.
எழுத்தில் நல்லதொரு சமூகப் படைப்பாக மிளிரும் நல்லபாடனின் கதைக்கு, திரைக்கதையிலும் பாடுபட்டிருந்தால் முக்கியமான படமாகியிருக்கும்.