தி.மு.க-வைப் பொறுத்தவரை சீட்டுக்கான ரேஸில் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, டாக்டர் அஞ்சுகம் பூபதி, நடிகர் துரை.சுதாகர், கலைமணி இளையபாரதி, எல்.ஜி.அண்ணா, திராவிடக் கதிரவன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் டாக்டர் அஞ்சுகம் பூபதி, நடிகர் துரை.சுதாகர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. பெண் நிர்வாகியான கலைமணி இளையபாரதி, வேட்பாளர் லிஸ்ட்டில் தனது பெயர் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக காய்நகர்த்தல்களைச் செய்கிறார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் இவர் நடத்தும் அறக்கட்டளை மூலம் செய்து வரும் சேவைகள் இதற்கு `விசிட்டிங் கார்டாக” அமைந்துள்ளது என்கிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களாகப் பெண் நிர்வாகி கலைமணி இளையபாரதி சீட்டுக்காகப் போராடி வருவதாகத் தொகுதிக்குள் பேசப்படுகின்றது.

இது குறித்து தி.மு.க வட்டத்தில் சிலரிடம் பேசினோம். “கலைமணி தி.மு.க-வில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயாலளர் உள்ளிட்ட பதவிகள் வகிக்கிறார். இவரின் கணவர் இளையபாரதி வழக்கறிஞர். துர்கா ஸ்டாலின் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் இவர், கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்படக்கூடியவர். 2006-ம் ஆண்டு தேர்தலில் விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. அப்போது தலைவரான கருணாநிதியிடம், முரசொலி தொண்டு நிறுவனம் பெயரில் தான் செய்த சேவை பணிகள் அடங்கிய ஆல்பத்தைக் காட்டி, வாய்ப்பு கேட்டிருக்கிறார்.