ஒரு வழியா அறிவிச்சட்டங்கப்பா: தவெக சார்பில் பிப் 6 முதல் விருப்ப மனு – Kumudam

Spread the love

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் முதல் முறையாக களமிறங்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விருப்ப மனு வினியோகிக்கப்படும் என த.வெ.க. கட்சி அறிவித்துள்ளது.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது.

இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சியின் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) முதல் 14.02.2026 (சனிக்கிழமை) வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

வருகிற 6-ம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *