'ஒரே ஒருத்தன்.!' – மாஸ் காட்டிய சூர்யவன்ஷி; ஆர்.சி.பி-யின் முதல் தோல்வி

Spread the love

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல் 10)நடைபெற்ற பெங்களூரு vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணிகளாக இந்த இரண்டு அணிகளும் களம் இறங்கின. சுவாரஸ்யமான இந்தப் போட்டியில் வெளுத்துக்கட்டி ராஜஸ்தான் அணி வென்றிருக்கிறது.

RR vs RCB
RR vs RCB

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இன்னிங்ஸின் முதல் ஓவரை ஆர்ச்சர் வீச, முதல் பந்திலேயே கீப்பரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார் பில் சால்ட். அடுத்து வந்த படிக்கல்லும் பாதி பவர் பிளேவில் வெளியேற, விராட் கோலி மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடி 32 ரன்களுக்கு பிஷ்னோய் சுழலில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

யார் என்ன செய்தார்களோ தெரியவில்லை, “சின்னசாமி மைதானத்தைத் தாண்டினால் எங்களுக்கு வேற கிரவுண்டில் விளையாடத் தெரியாது” என்பதைப் போல் விளையாடி வந்தது பெங்களூரு. பினிஷர்களாகக் களம் இறங்க வேண்டிய குருணால் பாண்டியா, ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட் போன்ற வீரர்களெல்லாம் 11 ஓவர்களுக்குள்ளேயே அவுட் ஆகி கவுகாத்தி மைதானத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டனர். ஆனால், கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்த ரஜத் பட்டிதார் மட்டும் ரன் ரேட்டை குறையவிடாமல் பார்த்துக்கொண்டார்.

Rajat Patidar
Rajat Patidar

அணியின் ஸ்கோர் 166-8 என்ற நிலையில் இருக்க, இவரும் சந்தீப் சர்மா ஓவரில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால், இம்பாக்ட் பிளேயராக வெங்கடேஷ் ஐயர் இறங்கி ஒரு காட்டு காட்டி, அணியின் ஸ்கோரை 201 ரன்கள் என்ற நிலையில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார். 202 என்ற டார்கெட்டை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஓப்பனர் ஜெய்ஸ்வால், “இந்த ஸ்கோர் சூர்யவன்ஷிக்கே பத்தாது, அதனால் நான் தேவையில்லை” என்று இரண்டு சிக்ஸர்கள் விளாசி ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் கடந்த போட்டியை எங்கே விட்டாரோ, அங்கிருந்தே தொடங்கினார் சூர்யவன்ஷி. பவர் பிளேவில் வீசிய பவுலர்களின் பந்துகளைச் சிதறடித்துக் கொண்டிருந்தார். பவர் பிளேவிலேயே போட்டியை முடிக்க வேண்டும் என்று ஆடியது போல் இருந்தது சூர்யவன்ஷியின் ஆட்டம். காயத்திலிருந்து மீண்டு வந்த ஹேசில்வுட்டை, “பேசாமல் காயத்திலேயே இருந்திருக்கலாம் போல” என்பதைப் போல பீல் செய்ய வைத்தார்.

வைபவ்
வைபவ் சூர்யவன்ஷி

மறுபக்கம் துருவ் ஜூரேலும் அவரின் பங்குக்கு அதிரடி காட்ட, போட்டி சீக்கிரம் முடிந்துவிடும் என்று பாதியிலேயே பெங்களூரு ரசிகர்கள் கலைந்து செல்ல, அணியின் சுழற் வேகப்பந்து வீச்சாளர் குருணால் பாண்டியா வீசிய ஒன்பதாவது ஓவரில் சூர்யவன்ஷி விக்கெட்டையும் ஹெட்மயர் விக்கெட்டையும் அடுத்தடுத்து எடுத்து, கலைந்து சென்ற ரசிகர்களையெல்லாம் அவரவர் இடத்திலேயே அமர வைத்தார்.

பொறுமையாக விளையாடினாலே வெற்றி நிச்சயம் என்ற நிலையில், கேப்டன் பராக் அவசரத்தில் ஆட்டமிழக்க, முடிந்து போன போட்டியைத் தன் வசம் ஆக்கலாம் என்ற நினைப்பில் பௌலர்கள் பந்து வீச, ஜடேஜா மற்றும் ஜூரேல் ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட, 18 ஓவர் முடிவிலேயே போட்டியை வென்றது ராஜஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் தோல்வியே காணாத அணியாகப் பாயிண்ட்ஸ் டேபிளில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது ராஜஸ்தான்.

எதிரணி பவுலர்களுக்குப் பாரபட்சமே பார்க்காமல் 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *