கொலம்பியாவின் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கானோ கிரிஸ்டலேஸ் (Caño Cristales), சாதாரண கண்களுக்கு ஒரு நதியாகத் தெரியாது; அது ஒரு நகரும் ஓவியம்.
இந்த நதி ஆண்டு முழுவதும் வண்ணமயமாக இருப்பதில்லை. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே இந்த அதிசயம் நிகழ்கிறது. மற்ற நேரங்களில் இது சாதாரண ஆற்றைப் போலவே காணப்படும்.
ஆனால், மழைக்காலம் முடிந்து வெயில் எட்டிப்பார்க்கும்போது, நதியின் அடிவாரத்தில் உள்ள “மக்ரேனியா கிளாவிஜெரா’ (Macarenia clavigera) என்ற அரிய வகை நீர்வாழ் தாவரம் சூரிய ஒளியைப் பெற்று அடர் சிவப்பு நிறமாக மாறுகிறது.
இது தவிர, ஆற்றில் உள்ள மணல் மஞ்சள் நிறத்தையும், பாசி பச்சை நிறத்தையும், நீரின் தெளிவு நீல நிறத்தையும், அங்குள்ள பழமையான பாறைகள் கருப்பு நிறத்தையும் தருவதால், இது ‘ஐந்து வண்ண நதி’ என்று புகழப்படுகிறது.
இந்த நதி பாயும் பாறைகள் சுமார் 1.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இந்த நதியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் படிவுகள் மிகக் குறைவாக இருப்பதால், நீர் படிகம் போல மிகத் தெளிவாக இருக்கும். இதனால் சூரிய ஒளி நேரடியாக அடிவாரத்தில் உள்ள தாவரங்களை சென்றடைகிறது.
இந்தத் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ‘கரோட்டினாய்டு’ (Carotenoid) எனும் நிறமிகளை உற்பத்தி செய்கின்றன. இதுதான் அந்த வசீகரமான சிவப்பு நிறத்திற்கு முக்கிய காரணமாகும். தண்ணீரின் அளவு மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தால் இந்த நிற மாற்றம் நிகழாது என்பது குறிப்பிடத்தக்கது.