கச்சா எண்ணெய்யைக் கொண்டுசெல்ல முடியாமல் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் காத்துகிடக்கும் 700 டேங்கர் கப்பல் | 700 tankers stranded outside Strait of Hormuz unable to transport crude oil

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும்.

காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள்

தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது.

தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி

இந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன.

ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *