கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' – காங்கிரஸ் கேள்வி

Spread the love

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்தது.

இந்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கியப் போர் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலால் சவுதி அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போரின் எதிர்வினையாக வர்த்தகத்தின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருக்கிறது.

மோடி - புதின்
மோடி – புதின்

அதனால் அங்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. எனவே, இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய எரிசக்தி சந்தைக்கு நிம்மதியளிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), மார்ச் 5, 2026 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 3, 2026 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விவாதமாகியிருக்கிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “ட்ரம்பின் புதிய விளையாட்டு இது… தன் டெல்லி நண்பரிடம் புதினிடமிருந்து எண்ணெய் பெறலாம் என அனுமதி அளித்திருக்கிறார். இந்த அமெரிக்க மிரட்டல் இன்னும் எவ்வளவு காலம் தொடரும்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் மத்திய அரசும் விவசாயம், இந்தியர்களின் தரவுகள், ஜவுளித் துறை என அமெரிக்க ஒப்பந்தம் என இந்தியாவை விற்றுவிட்டீர்கள்” எனக் குறிபிட்டிருந்தார்.

மதுரை எம்.பி.சு வெகங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு.” என விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *