கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து | Electric train derails at beach railway station

1359132.jpg
Spread the love

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நேற்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ஆவடியை நோக்கி நேற்று காலை 11:00 மணியளவில் மின்சார ரயில் புறப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் இன்ஜினில் இருந்து 9-வது பெட்டியின் 4 சக்கரங்கள் ரயில் பாதையை விட்டு இறங்கின.

இதையடுத்து, மின்சார ரயிலை ஓட்டுநர் அவசரமாக நிறுத்தினார். உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவத்தால் ராயபுரம் – சென்னை கடற்கரை நிறுத்தம் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் ரயிலில் இருந்த பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, தடம்புரண்ட ரயில் பெட்டியை மீட்டு, அங்குள்ள பணிமனைக்கு கொண்டு சென்றனர். சேதமடைந்த ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்று மதியம் 1:30 மணிக்கு முடிந்தது. இதன்பிறகு இந்த தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கத் தொடங்கின.

சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், “ரயில் தடம்புரண்ட உடனே, அந்த குறிப்பிட்ட பாதையை ஒதுக்கிவிட்டு, மற்ற பாதைகள் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், ரயில் சேவையில் பாதிப்பு இல்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்” என்று கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *