கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, காட்டு மன்னார் கோவில், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு பகுதியில் 600 ஏக்கர் சம்பா பருவ நெல் வயல்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.
புதுச்சத்திரம் அருகே உள்ள ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மணி மனைவி அசோதை (60), அவரது மகளான ராயர் என்பவரின் மனைவி ஜெயா (40) இருவரும் நேற்று ஒரே வீட்டில் துங்கியுள்ளனர். கனமழையால் அந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழந்ததில் 2 பேரும் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு பெய்த கனமழை இன்று காலையில் நின்றது. இதனால் மழை நீர் விளை நிலங்களில் இருந்து வாய்க்கால்களில் வேகமாக வடிந்து வருகிறது.