கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

Spread the love

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமாருக்கும் இந்துமதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் அசோக்குமாரைப் பிரிந்த இந்துமதி, தனியாக தன்னுடைய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று இந்துமதி, தன்னுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது இந்துமதியை வழிமறித்த அசோக்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்துமதியும் அசோக்குமாரும் சண்டை போடும் தகவல் இந்துமதியின் உறவினர் சந்திரபோஸ் என்பவருக்கு கிடைத்தது. உடனே சந்திரபோஸ், தன்னுடைய நண்பரான டிரைவர் நித்தியானந்தம் (38) என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றார். பின்னர் சந்திரபோஸ், நித்தியானந்தம் ஆகியோர், அசோக்குமாரிடம் பேச்சுவார்ததை நடத்தி அவரை சமரசப்படுத்த முயன்றனர். அப்போது ஆத்திரத்திலிருந்த அசோக்குமார், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தியானந்தத்தை சரமாரியாக குத்தினார். இதில் நித்தியானந்தம் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அசோக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிய நித்தியானந்ததை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நித்தியானந்தம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *