உயர் ரத்த அழுத்தத்தின்போது, ரத்தக் குழாய்கள் சுருங்கி (Vessel Narrowing), விழித்திரையின் மையப் பகுதியில் நீர் கோத்தல் (Macular Edema) ஏற்படுகிறது. மேலும், ரத்தக் குழாய்கள் வெடித்து, அங்கேயும் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகின்றன.
இந்த இரண்டு நிலைமைகளுக்கும் அளிக்கப்படும் முக்கியச் சிகிச்சைகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

முதலில் லேசர் சிகிச்சை (Laser Treatment), விழித்திரையின் அனைத்துப் பகுதிகளுக்கும் லேசர் சிகிச்சை (Pan-Retinal Photocoagulation – PRP) அளிக்கப்படுகிறது.
அடுத்தது, ஊசி சிகிச்சை (Injections), விழித்திரையின் மையப்பகுதி (Macula) பாதிக்கப்பட்டு இருந்தால், கண்ணுக்குள் நேரடியாக ஊசி போடும் சிகிச்சை (Anti-VEGF Treatment) அளிக்கப்பட வேண்டும்.
கடைசியாக, அறுவை சிகிச்சை (Surgery) பரிந்துரைக்கப்படலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை விலகல் (Tractional Retinal Detachment) போன்ற கடைசிநிலை பாதிப்புகள் இருந்தால், அதற்குரிய அறுவை சிகிச்சை (Retinal Detachment Surgery) செய்யப்பட வேண்டும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், தயவுசெய்து முதலில் அவற்றைச் சரிபார்த்து கட்டுக்குள் கொண்டு வாருங்கள். அதைத் தொடர்ந்து, உங்கள் கண் மருத்துவரை அணுகி, லேசர் வேண்டுமா அல்லது ஊசி சிகிச்சை வேண்டுமா என்பதை முடிவு செய்து சிகிச்சை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.