மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் உடல் இன்று காலை பாராமதி மருத்துவ கல்லூரியில் இருந்து இறுதிச்சடங்கிற்காக எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கூடி இருந்தனர். அங்கிருந்து வித்யா பிரதிஷ்தான் மைதானத்திற்கு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மறைந்த தலைவருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இது தவிர மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நிதின் கட்கரி, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, சுப்ரியா சுலே, சரத்பவார், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், பிரபுல் பட்டேல் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும், பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். அஜித் பவாரின் மனைவி சுனேதிர பவார் தனது கணவர் உடல் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். சுனேத்ரா பவார் முன்னிலையில் அவரது இரண்டு மகன்களான பார்த் பவார் மற்றும் ஜெய்பவார் ஆகியோர் தங்களது தந்தைக்கு தீமூட்டி இறுதிச்சடங்குகளை செய்தனர்.
முன்னதாக அஜித்பவாரின் உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அவர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுத காட்சியை நேரில் காண முடிந்தது.
விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வதற்காக இன்று தடயவியல் நிபுணர்களும், மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராமதிக்கு வந்திருந்தனர்.