பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கட்சி இரண்டாக உடைந்தது. அன்புமணி பாமகவினர் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளனர். ராமதாசின் பாமக, எந்த கூட்டணியில் இணைவது என தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார். புதுச்சேரியில் பாமகவின் அரசியல் நிலை தலைகீழாக மாறியுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவை அரியாங்குப்பம் தொகுதியில் பாமகவில் போட்டியிட்ட ராம்சிங் வெற்றி பெற்றார்.தொடர்ந்து, 2006ம் ஆண்டு தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் ராமதாசின் நெருங்கிய உறவினரான அனந்தராமனும், மண்ணாடிப்பட்டு தொகுதியில் அருள்முருகன் என்பவரும் வெற்றி பெற்றனர். கடந்த 2011ம் ஆண்டு அரியாங்குப்பம் தொகுதியில் மீண்டும் அனந்தராமன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட மு.ராமதாஸ் வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 9 தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்திலும் பாமக டெபாசிட் இழந்தது. 2006ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் பாமக பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் புதுச்சேரியில் பாமக தேர்தலை புறக்கணித்தது. தற்போது கட்சி இரண்டாக உடைந்து உள்ளதால், ராமதாசு, அன்புமணி என இருதரப்பினரும் புதுச்சேரி பாமகவை கண்டு கொள்ளவில்லை. இதனால் புதுச்சேரி பாமக நிர்வாகிகள் என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார். இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க உள்ளநிலையில், புதுச்சேரியில் பாமகவின் சகாப்தம் முடிந்துவிட்டது எனவே அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
