சேனுரான் முத்துசாமி 1994-ல் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் இந்திய வம்சாவளி முத்துசாமிக்கும், வாணி மூடேலிக்கும் மகனாகப் பிறந்தார்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாத்தா பாட்டி, இவர் பிறப்பதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
சேனுரான் முத்துசாமியின் உறவினர்கள் இன்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கின்றனர்.

சேனுரான் முத்துசாமி சிறுவயதாக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்ததால் தாய் வாணி ஒற்றை ஆளாகக் குடும்பச் சுமை மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆளாக்கினார்.
கிளிஃப்டன் கல்லூரியில் (Clifton College) படித்த சேனுரான் முத்துசாமி, குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் (University of KwaZulu-Natal) சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, மீடியா அண்ட் மார்கெட்டிங்கில் நிபுணத்துவமும் பெற்றார்.
கல்வியில் கவனம் செலுத்திய அதேவேளையில் பள்ளிப் பருவம் முதலே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி உள்ளூர் போட்டிகளில் தனக்கான இடத்தை உருவாக்கினார் சேனுரான் முத்துசாமி.