கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்காக ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை,22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இந்த அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றது.
முதல்வர் ஆணையின்படி, 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன்எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், மத்திய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50, எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195 எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215 எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349 என வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.3,500 என உயர்த்தப்பட்டுள்ளது.