கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்

Spread the love

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூறி பேசியிருந்தார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, ”திமுக மாலை 4-6 மணிக்குத்தான் கள்ள ஓட்டைப் போடுவார்கள். அப்போதுதான் நாம் இன்னமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வட சென்னையை திமுகவும் அதிமுகவும் எப்போதும் ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள்.

அண்ணா நகருக்கும் ஆர்.கே.நகருக்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன. 2014 இல் திமுக 40-40லும் தோல்வியடைந்த சமயத்தில்தான் நான் திமுகவில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

தினமும் முதல்வரைச் சந்தித்து வியூகங்களை வகுத்து கடுமையாக உழைத்தேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். அப்படிப்பட்டவனுக்கு அங்கே முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு சரியான எதிரியை திமுக பார்க்கவில்லை. அதனால்தான் தலைவர் 6 மாவட்டங்களுக்குச் சென்றவுடனேயே கரூர் சம்பவம் நடந்தது. ஆளும் தரப்பு எடுக்கும் சர்வேக்களே திமுகவை நடுங்க வைத்தது. அதனால்தான் நம்மைப் பிரசாரம் செய்ய விடாமல் முடக்கினார்கள்.

திருவாரூரில் தலைவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்தே திமுக பயந்துவிட்டது. கடந்த 15 நாட்களாக தவெக – பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்கிறது என்கிற செய்தி பரப்பப்பட்டது. திமுக, அதிமுகவும் சேர்ந்து பரப்பிய செய்தி அது. மிரட்டுபவர்கள்தான் கோழை. அமைதியாக இருப்பவன்தான் வீரன். அதேமாதிரி, காலை – மாலை எனப் பேசிக் கொண்டிருப்பவனே அரசியல் தெரியாதவன்.

ஆதவ்
ஆதவ்

குஜராத் கலவரத்தை கலைஞர் அந்த மாநிலப் பிரச்னை எனக் குறிப்பிட்டார். மதச்சார்பின்மை பேசும் ஸ்டாலின் அப்போது கலைஞரிடம் கேள்வி கேட்டிருக்கலாமே? பணமும் அதிகாரமும் கிடைத்தால் திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்குச் சேரும்.

பாஜகவுடன் கூட்டணி பேசியிருந்தால் ஜனவரி 10 ஆம் தேதியே ஜனநாயகன் ரிலீஸ் ஆகியிருக்கும். பராசக்தி படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகியது. ஜனநாயகன் இன்றைக்கு வரைக்கும் ரிலீஸ் ஆகவில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து வெளியேறியிருந்தால் டெல்லியே தலைவரை முதல்வர் ஆக்கியிருக்கும். ஆனால், தலைவர் கொள்கைப் பிடிப்போடு உறுதியாக நிற்கிறார்.

உதயநிதி நம்மை பார்த்து கொள்கை என்ன எனக் கேட்கிறார். அவரை நான் நேரடி விவாதத்துக்கு அழைத்தேன் இன்னும் வரவில்லை.

கூட்டணிக்கு நாம் செல்லவில்லை என்றவுடன் அதிமுக நம்மை விமர்சிக்கத் தொடங்குகிறது. கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பொய் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். தலைவர் கூப்பிட்டால் எங்கு வேண்டுமானாலும் கூட்டம் கூடும். எதற்காக கரூரில் சூட்டிங் நடத்த வேண்டும்? அது முழுக்க முழுக்க பொய் பிரசாரம்.

நாம் சமீபத்தில் எடுத்த சர்வேயில் திமுகவை விட 2% வாக்குகள் அதிகமாக எடுக்கிறோம். அதிமுக மூன்றாம் இடத்துக்குச் செல்கிறது. அதனால்தான் நம்மை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *