கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் உள்ளிட்டோர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
இந் நிலையில், நேற்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆஜராகினார்.
கடந்த இரண்டு நாள் விசாரணையில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவர்கள் அளித்த ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் தான், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் நேற்று சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார் என்று சொல்லப்படுகிறது.

இந்த விசாரணையின் போது, த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர், கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் எவ்வளவு மக்கள் கூடியிருந்தனர், த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் எவ்வளவு பேர் வருகை தந்தனர், கூட்டம் அதிகமாக இருப்பதால் விஜயை காவல்துறை ஏன் நிறுத்தவில்லை?, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர என்ன நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன உத்தரவு பிறப்பித்தார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.