“இங்கே பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் திருப்பதிப் பெருமாளுக்குக் கேட்கும்; இங்கு செலுத்தும் காணிக்கை திருப்பதி பெருமாளின் திருவடியில் சேரும்’ என்பது நம்பிக்கை.
திருக்கோயிலுக்கு வெளியே கருவறைக்கு நேர் எதிரில் கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ந்து வெளியே உள்ள கம்பத்தடி, பிரதான வாயில், உள் கம்பத்தடி, மகா பலிபீடம், கருடக் கம்பம், கருடன் சந்நிதியை தரிசித்து வலம் வரலாம்.
தொடர்ந்து அனுமனை வழிபட்டுவிட்டு, கருவறைக்குச் செல்லலாம். கருவறைக்கு முன்பு உள்ள வாகன மண்டபத்திலும் தூண் சிற்பங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன. இந்த மண்டபத்திலேயே விஷ்வக்சேனர், கருடன், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், மற்றும் ராமாநுஜரை தரிசிக்கலாம்.

கருவறையில் ஶ்ரீதேவி-பூமாதேவி சமேதராக ஶ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் அருள்கிறார். `பெயருக்கேற்ப சகல கல்யாண வரங்களையும் அருளும் தெய்வம் இவர்’ என்கிறார்கள் பக்தர்கள். திருவோண நட்சத்திர நாள்களில் பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறும். திருமண வரம் வேண்டும் அன்பர்கள் இந்த நாளில் பெருமாளுக்குத் தாமரை, துளசி சாத்திப் பெருமாளைச் சேவித்தால், அடுத்த மூன்று திருவோணத் துக்குள் திருமணம் கூடி வரும்.
மூல நட்சத்திர நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் சமர்ப்பித்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும். குழந்தைகள் கல்வியில் மேன்மை அடைவார்கள்; தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை, தயிர்சாதம் சமர்ப்பித்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கருட பஞ்சமி அன்று இங்குள்ள கருடனை வழிபட்டால், நாகதோஷங்கள் நீங்கும்.
நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் இந்தக் கோயிலுக்குச் சென்று வாருங்கள்; சகல நன்மைகளும் உண்டாகும்.!