கரூர் 41 பேர் பலியான சம்பவம் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரிக்க சிபிஐ சம்மன் – Kumudam

Spread the love

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 41 பேர் நெரிசலில் சிக்கி பலி ஆகினர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா என தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது, பலி சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் த.வெ.க.,வினர் புகார் தெரிவித்து இருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி ஆஜராக, சிபிஐ நேற்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அந்த சம்மனை, செந்தில் பாலாஜியோ, அவரது அலுவலக ஊழியர்களோ வாங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு ‘இ -மெயில்’ வாயிலாகவும், ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. அதற்கும், செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. சம்மனை ஏற்று விசாரணைக்கு செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை.

இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அப்படியொரு சம்மன் எதுவும் தனக்கு வரவில்லை என, செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, எனக்கு சம்மன் வரவில்லை. மூன்று நாட்களுக்கு முன், கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள எனது வீட்டுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது, நான் வீட்டில் இல்லை; பெற்றோர் மட்டும் இருந்தனர். இதனால், சி.பி.ஐ., அதிகாரிகள் திரும்பி சென்று விட்டனர். அந்த சமயத்தில் சம்மன் எதுவும் வழங்கவில்லை. ஒருவேளை விசாரணைக்கு வருமாறு, சி.பி.ஐ., சம்மன் வழங்கினால், நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிப்பேன். இவ்வாறு செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து உள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *