கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்? வெயில் மாவட்ட விறுவிறு | the ground situation in the assembly constituencies contested by admk district secretaries in the unified vellore district

Spread the love

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்பட ஐந்து மாவட்ட கழகச் செயலாளர்களும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி மட்டுமே அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற நால்வரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.

இந்த நிலையில், வரும் தேர்தலிலும் அ.தி.மு.க-வின் ஐந்து மாவட்டச் செயலாளர்களும் மீண்டும் போட்டியிட ஆயத்தமாகி, பிரசாரக் களத்துக்கும் சென்றுவிட்டனர். `களம் எப்படி இருக்கிறது?’ என்பதை அவர்களின் தொகுதிகளில் இறங்கி அலசினோம்.

சிக்ஸர் அடிக்கும் அப்பு… டக்அவுட் ஆகும் கார்த்தி?

வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்பு மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்த அப்புவை, இந்த முறை தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திகேயனின் அட்ராசிட்டியே மேலேற்றிவிடும் என்கிறார்கள்.

`மாநகராட்சியைக் குட்டிச்சுவராக்கியது, கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வினருடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபடுவது’ என கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடந்த 19-ம் தேதி, தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் வழங்கியதாக கார்த்திகேயனின் ஆதரவாளரான மேயர் சுஜாதா உட்பட மூன்றுபேர் மீது சத்துவாச்சாரி போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார்

எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார்

இவையெல்லாம் தி.மு.க தலைமையின் கவனத்திற்குச் செல்லவே, 20-ம் தேதி நடைபெற்ற நேர்காணலின்போது, `வேலூர் தொகுதியை கூட்டணிக்குக் கொடுத்துவிடலாமா?’ என்று ஸ்டாலின் கேட்டதற்கு, `சரிங்க, தலைவரே’ என்று கார்த்திகேயன் தலையாட்டிவிட்டு வந்ததுதான் உடன்பிறப்புகளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்திருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களாகத்தான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் வேலூர் தொகுதியில் நேரடியாக மோதுகின்றன. அதற்கு முன்புவரை இரண்டு கட்சிகளுமே மாறி மாறி கூட்டணிக்கே வேலூரைத் தாரைவார்த்தன. எனவே, `மீண்டும் அந்தவொரு சூழலை உருவாக்காமல், அ.தி.மு.க-வுடன் தி.மு.க நேரடியாக மோத வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள் வேலூர் உடன்பிறப்புகள். தற்போதைய சூழலில், களம் எஸ்.ஆர்.கே.அப்புக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிறார்கள்.

வேலழகன் வெறுப்பு பிரசாரம்… நந்தகுமார் சாதுர்யம்!

வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான த.வேலழகன் மீண்டும் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, கடந்த ஜனவரி மாதமே தொகுதிக்குள் சோஷியல் மீடியா டீமை இறக்கி, சிட்டிங் எம்.எல்.ஏ-வான தி.மு.க மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு எதிராக கடுமையான தனிமனித தாக்குதலையும், வெறுப்பு பிரசாரத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த நந்தகுமாரே மூன்றாவது முறையாகவும் களமிறங்குகிறார். தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேடைக்கு மேடை பேசி, தனக்கெதிரான வெறுப்பு பிரசாரத்துக்கும் பதிலடி தந்துகொண்டிருக்கிறார். தற்போதைய சூழலில், களம் நந்தகுமாருக்குச் சாதகமாகவே இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *