கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான யுத்தம் முடிவுக்கு வருகிறது போலும்.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு இடையே அரசல் புரசலாக இருந்து வந்த முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி, கடந்த வாரம் வெட்ட வெளிச்சமானது.
டி.கே.சிவக்குமாரோ, “சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும்” என்றும், பதிலடியாக, சித்தராமையாவோ, “உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை” என்று எக்ஸ் பக்கத்தில் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலுக்கு உடனடியாக காங்கிரஸ் மேலிடம் எதிர்வினையாற்றியது. காங்கிரஸ் மேலிடம் இருவரையும் அழைத்து சமாதானமாக போக சொல்லியும், அடுத்து டெல்லியில் எந்த மீட்டிங் நடந்தாலும், அதில் இருவரையும் ஒற்றுமையாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இதையடுத்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29), டி.கே.சிவக்குமார் சித்தராமையா வீட்டிற்கு சென்றிருந்தார்.
உணவருந்திய பின், இருவரும் செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவரும் ஒன்றாக தான் செயல்படுகிறோம். காங்கிரஸ் மேலிடம் என்ன கூறுகிறதோ, அதை அப்படியே பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.
மேலும், அந்தச் சந்திப்பு, 2028-ம் ஆண்டு நடக்க உள்ள கர்நாடகா தேர்தலுக்கான மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான சந்திப்பு என்றும் கூறினார்கள்.