கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு… சிகிச்சையில் பலர் – ஆந்திராவில் அதிர்ச்சி!

Spread the love

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றனர். ஆனால் அவர்களில் வயதான 4 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்கள். மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கேள்விப்பட்டதும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அனூரியா பாதிப்பு

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், “இது போன்ற பிரச்னைக்கு அனூரியா என்று சொல்வதுண்டு. அதாவது இப்பிரச்னை அசுத்தமான பால் காரணமாக வரக்கூடியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் வெளியேறுவது வெகுவாக பாதிக்கப்படும். அல்லது சிறுநீரே வெளியேறாது. பொதுவாக பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 மில்லி மீட்டருக்கும் குறைவாக சிறுநீர் வெளியேறுவதை இவ்வாறு கூறுவதுண்டு” என்று தெரிவித்தனர்.

இது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதற்கான தீவிர அறிகுறியாகும். உடலில் உள்ள கழிவுப் பொருள்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை இந்த வேலையைச் செய்யத் தவறும்போது, ரத்த ஓட்டத்தில் நச்சுகள் விரைவாகச் சேரக்கூடும். இது மற்ற உறுப்புகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து, உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

சிறுநீரகங்கள் உயிர்வாழ மிக அவசியமானவை. அவை திடீரெனச் செயல்படுவதை நிறுத்தும்போது, சாதாரணமாகச் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட வேண்டிய யூரியா மற்றும் கிரியேட்டினின் போன்ற கழிவுப் பொருள்கள் உடலில் தேங்குகின்றன. இது உடலில் அதிகப்படியான நீர் சேர்தல் (Fluid overload), வளர்சிதை மாற்றச் சமநிலையின்மை போன்ற பிரச்னையை உருவாக்குகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பல உறுப்புகள் செயலிழப்பது போன்ற அபாயகரமான நிலைகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு செய்ததில் ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவு அபாயகரமாக அதிகரித்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *