ஒரு சாமானிய கிராமத்து இளைஞன், தன் பாரம்பர்யக் கலையை உயிர்ப்பிக்க நடத்திய 32 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு இன்று தேசமே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது.
1983-ஆம் ஆண்டு, ஒரு விளையாட்டாக சிலம்பம் பழகத் தொடங்கிய பழனிவேலுக்கு, அதுவே வாழ்நாள் சுவாசமாக மாறும் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கலையின் மீது கொண்ட தீராத காதலால், வெறும் பயிற்சியாளராக மட்டும் நின்றுவிடாமல், இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஆசானாக உருவெடுத்தார்.

உலக மேடைகளில் சுழன்ற சிலம்பம்
இந்திய எல்லைகளைத் தாண்டி, துபாய் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பழனிவேலின் சிலம்பக் கம்புகள் சுழன்றுள்ளன. அங்கு நடந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றதுடன், வெளிநாட்டவர்களுக்கும் நம் மண்ணின் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து அசத்தியவர் இவர்.
சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல வெற்றிகளைக் குவித்துள்ள இவருக்கு, 2004-இல் சிறந்த இளைஞருக்கான விருதும், 2012-இல் புதுச்சேரி அரசின் “கலைமாமணி’ விருதும் தேடி வந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதையும் வென்று சாதனை படைத்தார்.