பண்ருட்டியார் அடுத்து இறக்கியதுதான் ஹைலைட். ‘பிப்ரவரி 23 ஆம் தேதி காஞ்சிபுரத்துல மாநாடு நடத்தப் போறோம். அன்னைக்கு மழை பெய்யும்னு சொல்லியிருக்குறதுனால கல்யாண மண்டபத்துல வச்சு…’ பண்ருட்டியார் இப்படி அறிவிப்பை கொடுக்கையிலேயே அருகிலிருந்த ரஞ்சித் குமார் ‘ஐயா…மூவாயிரம் பேர் கலந்துக்குறாங்க’ என காதில் கிசுகிசுத்தார்.
நம்பரை சொன்னால் பிரமாண்டத்தின் மீது கண்ணுப்பட்டு விடும் என்பதால் கண நேரத்தில் ‘மண்டபத்துல வச்சு பிரமாண்டமா நடத்துறோம்’ என சமயோஜிதமாக லடாய் கொடுத்தார் பண்ருட்டியார். ஹோட்டலில் கட்சி அறிவிப்பு, மண்டபத்தில் மாநாடு! இது நல்லாருக்குல்ல?

‘ஐயா நீங்கள் யாருடன் கூட்டணி’ என நிருபர்கள் கேட்க, ‘இன்னும் முடிவு செய்யவில்லை கொள்கைகளோடு ஒத்துப் போபவர்களோடு கூட்டணி!’ என்றார்.
அடுத்ததாக 2026 தேர்தல் யாருக்கும் யாருக்கும் போட்டி இருக்குமென நினைக்கிறீர்கள் என்று கேள்வி, சற்றும் யோசிக்காமல் ‘திமுக Vs விஜய்’ என்றார்.
விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். உங்களின் கொள்கை என்னவென கேட்க, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார்.
‘யாருடன் கூட்டணி’ என முந்தைய கேள்வியை கேட்டிருந்த நிருபர், ‘ஐயா மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க’ என சொல்ல வாயெடுத்து அப்படியே வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார்.
‘சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சு 1% ஓட்டையாச்சு வாங்கிக் காட்டுங்க’ என்ற பனையூர் தலைவரின் சேலம் சேலஞ்சை ஏற்றிருக்கும் முதல் அரசியல் கட்சித் தலைவர் பண்ருட்டியார்தான் என்பதால், விஜய்யின் வியூகத் தரப்பு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தோடு பனையூரில் காத்திருக்கிறதாம்!
பிரமாண்ட மாநாட்டுக்கான வேலைகள் இருப்பதால் மிகச்சுருக்கமாக நாற்பது நிமிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு விர்ரென காஞ்சிபுரம் புறப்பட்டார் ஐயா!
கூட்டணிப் பேச்செல்லாம் மாநாட்டுக்கு பிறகதானாம்.
பிப்ரவரி 23 ஆம் தேதி அடிக்கப்போகும் அரசியல் சுனாமியில் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ.!