பின்னலாடை மாவட்டத்திலுள்ள தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்திருக்கிறார். அதனால், தன்னுடைய உறவினர் ஒருவர் மூலமாக த.வெ.க மேல்மட்ட நிர்வாகியை அணுகிப் பேச்சுவார்த்தை நடத்திய அந்த எம்.எல்.ஏ., விரைவிலேயே த.வெ.க பக்கம் தாவ ஆயத்தமானாராம். இதைக் கண்டுபிடித்த தி.மு.க மேலிடம், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-விடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டாராம் அந்த எம்.எல்.ஏ. அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல, பின்னலாடை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் கட்சி நிகழ்ச்சியில், மேடையிலேயே எம்.எல்.ஏ-வுக்கு இடமும் ஒதுக்கப்படவிருக்கிறதாம். இந்த விஷயத்தை அறிந்த கட்சிக்காரர்கள், `கட்சி மாற நினைத்தால்தான் கட்சிக்குள் மரியாதையே கிடைக்கும்போல…’ என்று கட்சித் தலைமையின் செயல்பாடுகளை நினைத்து ஆதங்கப்படுகிறார்கள்!