அறுவடை எல்லாம் செய்த பின் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னையே, இந்த களம்! ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒன்றோ, இரண்டோ இந்த உலர்களங்கள் இருக்கவேண்டும் என்பது அவசியம். ஒரு விவசாயி தன் மொத்த உழைப்பையும் நிலத்தில் போட்டு பொன்னாக விளைவிக்கிறார்.
ஆனால் அந்த பொன்னுக்கான விலை அவரால் இதுதான், இவ்வளவுதான் என்று இன்னமும் சரியாகச் சொல்ல முடிவதில்லை. இந்த நிர்ணய விலைக்குப் பின் ஒளிந்திருக்கும் ரகசியமே இந்த உலர்களம்.
ஆம்! கிராமப்புறங்களில் விளையும் நெல், கம்பு, எள், மக்காச்சோளம், சோளம் போன்ற தானிய வகைகளும், உளுந்து, பச்சை, மொச்சை போன்ற பயிர் வகைகளும் அறுவடைக்கு பின் உலர வைக்கவே இந்த உலர்களம் பயன்படுகிறது. விவசாயிகளின் இந்த அறுவடை பயிர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு காய்ந்து உலர்த்தப்பட்டு சாகுபடி ஆகிறதோ அதை வைத்தே அவற்றின் விலை நிர்ணயம் ஆகிறது என்பதே உண்மையின் உச்சம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு எனும் கிராமத்தின் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தகவலறிந்து நேரில் சென்று விசாரித்தோம்.
இங்கு மட்டும்தான் இந்தப் பிரச்னை என்று கருதினால் அது தவறு. கிராமபுரங்கள் என்றாலே இந்த பிரச்னையில் வாழ்ந்து பழகிப்போன விவசாயிகள், வெளியில் இதைச் சொல்லி என்ன நடக்கப்போகிறது என்று கைவிட்ட இடங்களும் எத்தனையோ இருக்கின்றன.
இந்த உலர்களமானது, பரவலான வெளியையும், தரமான சுற்றுச்சுவர் கட்டமைப்பும் எல்லாவற்றிற்கும் மேல் சமதள மைதானம் போல் இருக்க வேண்டும். ஆனால் ஆண்டுகளின் ஓட்டத்தில் சிக்கி தரமற்ற பரவலான வெளியாய் இப்போது கிடக்கிறது. இதில் கம்போ, உளுந்தோ, எள்ளோ, சோளமோ ஏன், நம் அத்தியாவசிய உணவான நெற்பயிர் முதற்கொண்டு எதையுமே இதில் காயவைக்க முடிவதில்லை. இந்த உலர்களத்தின் நிலையே இதற்கெல்லாம் காரணமாக அமைகிறது.