அதனால், திருவண்ணாமலை இடைத்தேர்தலில் அதிக கவனம் செலுத்தியது காங்கிரஸ் கட்சி.
ஆனால், திருச்செங்கோடு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்தோடு களம் கண்டனர் திமுக தொண்டர்கள்.
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது,
காகிதப் பூ மணக்காது;
காங்கிரசின் சமதர்மம் இனிக்காது,
இந்தியை மத்திய அரசு திணிக்கிறது;
மெல்லத் தமிழ் இனிச் சாகும்
என்று முழங்கினார் அண்ணா.
அனைவருக்கும் தொடக்க கல்வி, மாணவர்களுக்கு சீருடை, தேவைக்கேற்ப குடிநீர் என்று அரசுத் திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் காமராஜர். காங்கிரஸ் வேட்பாளர் பெயர் பத்ராசலம், அதாவது அண்ணாமலை என்று பொருள். தேர்தல் நடப்பதோ திருவண்ணாமலை என்று காங்கிரஸ் கட்சியினர் பரப்புரை செய்தார்கள்.
தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி தந்தது.
இந்திய அரசியல் வரலாற்றில், சட்டமன்ற இடைத்தேர்தலில், முதன் முதலாக ஆளுங்கட்சியை தோற்கடித்து, எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.
காட்பாடி முதல் கன்னியாகுமரி வரை கொண்டாட்டங்களுக்கு நாள் குறித்தார் அண்ணா. ஊர் ஊராக மேடை அமைத்து, வெற்றி நாயகர் ப.உ.சண்முகம் கெளரவிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் திமுக நடத்திய வெற்றிக் கொண்டாட்டங்கள், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க அடித்தளமிட்டது.

பொதுத்தேர்தலில் 35,148 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி, இடைத்தேர்தலில் 37,191 வாக்குகள் பெற்றது. ஆனால், பொதுத்தேர்தலில் 33,399 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம், இடைத்தேர்தலில் 38,666 வாக்குகள் பெற்று வெற்றியைத் தட்டிச் சென்றார்.
காங்கிரசின் தோல்வி, காமராஜருக்கு பின்னடைவாக அமைந்தது. அரசுப் பணிகளை மட்டுமே பார்ப்பதால், கட்சிப் பணிகளில் கோட்டை விட்டதாக காங்கிரஸ் கருதியது. முதலமைச்சர், அமைச்சர்கள் தங்களது பதவிகளைத் துறந்து, கட்சிப் பணி செய்ய வேண்டுமென புதிய திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு, நேரு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார். ஆனால், மற்றவர்களின் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.!
தொடரும்…!