‘ பூத் அளவில் ஒரு கட்சியின் வலுவை வைத்துதான் அந்தக் கட்சி எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை அனுமானிக்க முடியும். அந்த வகையில் காங்கிரஸ் பின்னடைவையே சந்திக்கிறது. மேலும் காங்கிரஸின் தேசியத் தலைமையும் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்கான அக்கறையை காட்டுவதில்லை. காங்கிரஸின் எதிரியான பாஜகவின் முக்கிய தலைகள் தமிழகத்தில் முகாமிடுவதில் பாதியளவுக்கு கூட காங்கிரஸ் தலைகள் இங்கே எட்டிப் பார்ப்பதில்லை.
வாக்குவங்கியில் பெரும்பலமில்லாத, அதை உயர்த்திக் கொள்ள எந்த பிரயத்தனமும் எடுக்காத ஒரு கட்சிக்கு எதற்கு அதிக சீட்டுகளை கொடுக்க வேண்டும்? எதற்கு அவர்களை மந்திரியாக்க வேண்டும் என்பதுதான் உ.பிக்களின் குமுறல்.

மேலும், காங்கிரஸின் உருட்டல்களுக்கு பயந்து ஒரு எல்லைக்கு மேல் அதிக சீட்டுகளை அவர்களுக்கு கொடுத்தால், விசிகவும் கம்யூனிஸ்ட்டுகளும் முகம் சிவப்பார்கள். அவர்களுக்கும் அதிக தொகுதிகளை கொடுத்தால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்ட போதே 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. இப்போது ஆட்சியின் மீதான குறைபாடுகளோடு தேர்தலை எதிர்கொள்கிறது.
ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து, அதன்வழி தனித்த மெஜாரிட்டியை பெற முடியாமல் போனால் அமைச்சரவையை பகிர்ந்தே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள யார்தான் விரும்புவார்?
2006 போன்ற மைனாரிட்டி நிலை இப்போது வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக காங்கிரஸிடம் இவ்வளவு கறார் காட்டுவதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.!