காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர்.
இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள்.
இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
காஞ்சிபுரம் நகரின் மத்தியிலிருந்து சுமார் 1 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மூலக் கோயிலைச் சுற்றி 58 சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு வடிவிலும் ஈசன் அமர்ந்து அருள்கிறார்.
பிராகாரச் சுவர்களில் சப்தமாதர், கணபதி, திருமால் போன்ற சிறு தெய்வங்களும் உள்ளனர். 58 சிறு கோயில்களின் இரு பக்கவாட்டில் உள்ள பாறை குடைவுகளில் ஒருவர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
அதாவது, ஒரேவேளையில் எண்பதற்கும் மேற்பட்ட தவசிகள் இந்தச் சிறு ஆலய குடைவரையில் அமர்ந்து தியானம் செய்யலாம் என்பது அதிசயமான இந்த ஆலயத்தின் அமைப்பு என்கிறார்கள்.

கி.பி. 700-ம் ஆண்டின் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம் இது. இது சுதை வடிவில் உருவான பிரம்மாண்ட கோயில். சுவாமி இங்கே குடமுழுக்குக்கு வராமல் திருநின்றவூர் பூசலார் மனதில் உண்டாக்கிய கோயிலுக்கு எழுந்தருளச் சென்றார் என்கிறது சமயநூல்கள்.
இதைப்போன்றே ஒரு வியக்க வைக்கும் ஒரு சரித்திர உண்மையும் உண்டு. இந்த நகரையே அழிக்க வெறிகொண்டு வந்த மன்னன், தன்னையே மறந்து இந்தக் கோயிலுக்கும் கயிலாசநாதருக்கும் அடிமையான வரலாற்றுச் சம்பவம் அதிசயத்திலும் அதிசயம்.
642-ஆம் ஆண்டு பல்லவ தளபதி, மேலைச் சாளுக்கியத்தின் தலைநகரும் கலைநகருமான வாதாபியை வென்று தீக்கிரையாக்கினான். சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியையும் கொன்று அழித்தான் என்கிறது வரலாறு.
அதன் பிறகு காலங்கள் பல சென்ற பிறகு இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்ரமாதித்தன் சாளுக்கிய அரசனானான். அவனுக்குப் பிறகு வினயாதித்தன், விஜயாதித்தன் காலத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தான் மாவீரன் இரண்டாம் விக்ரமாதித்தன்.