சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீ்திமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூசிவாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் அப்பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இக்கடையில் கடந்த ஜூலை மாதம் கேக் வாங்கி சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடை உரிமையாளரான சிவக்குமாருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிவக்குமாரின் மருமகனான காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் பாதுகாப்பு காவலராக ஏற்கனவே பணியாற்றிய லோகேஷ் (32), முருகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து, முருகனின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில், சிவக்குமார், லோகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வாலாஜாபாத் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், அவர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல், வழக்கின் விசாரணை அதிகாரியான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். சதீ்ஷ்குமார் முன்பாக நேற்று நடந்தது. அப்போது, காஞ்சிபுரம் எஸ்பி உள்ளிட்டோர் தரப்பி்ல் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “மாவட்ட நீதிபதியான செம்மலுக்கும், அவரது பாதுகாப்பு காவலராக பணியாற்றிய லோகேஷூக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
அதன் காரணமாக லோகேஷ் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டார். உண்மையில், லோகேஷ் மற்றும் அவரது மாமனார் சிவக்குமாருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகார் இருதரப்பும் சமரசமானதால் முடித்து வைக்கப்பட்டுவிட்டது.
ஆனால், மாவட்ட நீதிபதியின் அழுத்தம் காரணமாகவே மீண்டும் அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்.4 அன்று லோகேஷ் மற்றும் அவரது மாமனாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்பிறகு, அவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை எனக் கூறி, வழக்கின் விசாரணை அதிகாரியான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிபதி செம்மல் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். எனவே, டிஎஸ்பியை சிறையில் அடைக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என, வாதிட்டார்.
அதேபோல், காவலர் லோகேஷ் தரப்பி்ல் ஆஜரான வழக்கறிஞர் சரத்சந்திரன், ” லோகேஷ் மற்றும் அவரது மாமனார் உள்ளி்ட்டோரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது என்பதால் அதையும் ரத்து செய்ய வேண்டும், எனக் கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். சதீஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்த வழக்கில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருப்பது அசாதாரணமானது.
இவ்வாறு அவர் உத்தரவிடும் முன்பாக நிர்வாக ரீதியாக முன்அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறையை மாவட்ட நீதிபதி பின்பற்றவில்லை. மேலும், முன்விரோதம் காரணமாகவே காவலர் லோகேஷ் மற்றும் அவரது மாமா சிவக்குமாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டுள்ளது.
விசாரணை தள்ளிவைப்பு: எனவே, டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது, லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்கிறேன்.
விசாரணை அதிகாரியான டிஎஸ்பியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்.23-க்கு தள்ளி வைத்துள்ளார்.