காஞ்சி வரதராஜர் கோயிலில் தங்கப் பல்லி மாயம்? – உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை | Minister warns of strict action if golden lizard missing is true from Kanchi Varadaraja Temple

Spread the love

காஞ்சிபுரம்: உல​கப் பிரசித்தி பெற்ற காஞ்​சிபுரம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் உள்ள ‘தங்​கப் பல்​லி’ காணா​மல் போய்விட்டதாக பக்​தர் ஒரு​வர் அளித்த புகார் அளித்​துள்​ளார். இந்​தப் புகாரில் உண்​மைத் தன்மை இருந்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்படும் என்று அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​துள்​ளார்.

காஞ்சி வரத​ராஜர் கோயி​லில், பக்​தர்​களால் தோஷ நிவர்த்​திக்​காகத் தொட்டு வணங்​கப்​படும் புகழ்​பெற்ற ‘தங்​கப் பல்​லி’ மாய​மாகி​விட்​ட​தாக, ஸ்ரீரங்​கத்​தைச் சேர்ந்த பக்​தர் சமீபத்​தில் புகார் அளித்​தார். இது தொடர்​பாக, சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் காஞ்​சிபுரம் வரத​ராஜர் கோயி​லில் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

அப்போது கோயில் நிர்​வாகம் சார்​பில், பல்லி இருந்த இடத்​தில் பராமரிப்​புப்பணி​கள் நடை​பெறு​வ​தால், தெற்குப் பகு​தியில் பல்லி தரிசனம் இடமாற்​றம் செய்​யப்​பட்​டதாக விளக்​கம் அளிக்​கப்​பட்​டது. அதனைத் தொடர்ந்​து, விசா​ரணை நடத்​தி​விட்​டுச் சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் அங்​கிருந்து புறப்​பட்​டனர்.

இந்த விவ​காரம் குறித்​துக் கோயில் நிர்​வாகத்​தின் முக்​கிய அதி​காரி ஒரு​வரிடம் கேட்​ட​போது, அவர் அளித்த விளக்​கம்: பக்​தர்​களிடையே ‘தங்​கப் பல்​லி’ என்று அழைக்​கப்​படு​வது உண்​மை​யில் பித்​தளை​யால் செய்​யப்​பட்ட பல்​லிச்சிற்​பம்​தான். பித்​தளைப் பல்​லி, வெள்​ளிப் பல்​லி, சூரியன், சந்​திரன், சக்​கரம் ஆகியவை சேர்ந்​தது ஒரு செட் ஆகும்.

கோயி​லில் இது​போல் மொத்​தம் மூன்று செட்​கள் உள்​ளன. இதில் ஒருசெட் நூற்​றாண்​டுக்​கும் மேல் பழமை​யானது. ஆனால் அது மிக​வும் சேதமடைந்த நிலை​யில் இருந்​த​தால் தற்​போது பயன்​பாட்​டில் இல்​லை. தற்​போது பயன்​பாட்​டில் இருப்​பது, 1970-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ ஜெயேந்​திர சரஸ்​வதி சுவாமிகளால் அளிக்​கப்​பட்ட செட் ஆகும்.

இது​வும் காலப்​போக்​கில் சேதமடைந்​துள்ளது. இதையடுத்​து, 2012-ம் ஆண்டு ஒரு பக்​தர் நன்​கொடை​யாக அளித்த புதிய செட்டை வைப்​ப​தா? என்​று​ தான் கோயில் நிர்​வாகம் சார்​பில் ஆலோ​சனையே செய்​யப்​பட்​டது. பல்​லிச் சிற்​பங்​கள் மாற்​றப்​பட​வில்​லை.

பராமரிப்​புப் பணி​கள் முடிந்​தவுடன் பல்​லிச் சிற்​பங்​கள் பழைய இடத்​திலேயே மீண்​டும் வைக்​கப்​படும். புகார் எழுந்​ததையடுத்​து, எங்​களிடம் இருக்​கும் பல்​லிச் சிற்​பங்​களை சிலை கடத்​தல் தடுப்​புப்பிரி​வினரிடம் காட்​டி, விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளித்​துள்​ளோம் என்​றார்.

இதுதொடர்பாக அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “காஞ்​சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயிலில் தங்​கப் பல்லி காணா​மல் போன​தாக அளிக்​கப்​பட்ட புகாரில் உண்​மைத் தன்மை இருந்​தால் அதன் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்​டோம். இதுகுறித்த விளக்​கத்தை காஞ்​சிபுரம் மண்​டல இணை ஆணை​யர்​ அறிக்​கை​யாக அளிப்பார்​” என்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *