சென்னை: சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காணும் பொங்கலையொட்டி சென்னையில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்கள். இதற்கு ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாமல்லபுரம், கோவளம், எம்ஜிஎம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி, இறக்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள், பரிசோதகர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.