பாடலாசிரியர் முத்தமிழிடம் பேசுகையில், “வாங்க! என் பாடல்களில் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அதன் சுவாரஸ்யம் குறையாமல் பேசுவோமே…” என்ற புத்துணர்வோடு பேசத் தொடங்கினார்.
“முதலில் நடிப்பு, டைரக்ஷன் ஆசையில்தான் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால், சினிமாவில் 10 வருடம் நடித்தாலும் நான் எப்படியான நிலையில் இருப்பேனென்று சில சந்தேகங்கள் எழுந்தன. என் கல்லூரி சமயத்திலிருந்து நான் நன்றாகப் பாடவும் செய்வேன். பாடல்கள் எழுதினால் போஸ்டரில் நம் பெயர் வந்துவிடும். அதிலிருந்து ஒரு வெளிச்சம் கிடைக்குமென நினைத்து பாடலாசிரியரானேன். என் கல்லூரி நண்பன் சந்தோஷ் நாராயணன் படத்திலிருந்து என் பாடலாசிரியர் பயணம் தொடங்கியது.” என்றவரிடம், ‘காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு’ பாடல் தொடர்பாகப் பேசத் தொடங்கினோம்.

மலர்ந்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், “காதலை அனைவரும் மென்மையானது எனக் குறிப்பிடுவார்கள். ஆனால், தொடக்கத்திலேயே இதில் நான் காதலை அறை எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன் என்று சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், காதலில், பெண்ணொருவள் பார்வையால் என்னை அடித்துவிட்டாள் எனச் சொல்வார்களே, அப்படியான அர்த்தத்தைத்தான் இந்த வரியில் கொண்டு வர நினைத்தேன்.