மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து ரூ.5000 கொடுத்திருக்கிறார். ஆனால், அரசு கருவூலமே காலியானாலும் சரி, கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் சரி, இனி தி.மு.க-வுக்கு ஓட்டு விழாது. இது முழுக்க முழுக்க தேர்தலைக் கண்டு வந்த பயம். தோல்வி உறுதி என்று தெரிந்ததால், எப்படியாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வாரி வழங்குகிறார்.
கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு மானியம், டீசல் விலை குறைப்பு போன்றவை என்னவானது? கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ஒழிப்பு, ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் என எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். குறைகளை தீர்ப்போம் எனப் பெட்டி வைத்து மனுக்களை வாங்கினாரே ஸ்டாலின், அந்த மனுக்கள் எல்லாம் இப்போது எங்கே?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.25,000 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணத்தை இரண்டு முறை உயர்த்தியது, சொத்து வரி, வீட்டு வரி உயர்வு என மக்களின் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, இப்போது தேர்தல் நேரத்தில் ரூ.1000, ரூ்.2000 எனக் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல். இது கடந்த நான்கரை வருடம் காயத்தை ஏற்படுத்திவிட்டு, கடைசியில் மருந்து தடவுவதைப் போன்றது.