காரைக்குடி விஜய் திடீர்  சைக்கிள் பயணம்  தவெக தொண்டர்கள் உற்சாகம்  – Kumudam

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். மதுரையிலிருந்து சாலை மார்க்கமாகப் பிரசார வாகனத்தில் புறப்பட்ட அவருக்கு, வழிநெடுங்கிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் காரைக்குடி வந்தடைய சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.

சைக்கிள் பயணம் தொண்டர்கள் உற்சாகம் 

காரைக்குடி நகருக்குள் நுழைந்தபோது, திடீரெனத் தனது பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கிய விஜய், அங்கிருந்த ஒரு சைக்கிளில் ஏறிச் சிறிது தூரம் பயணம் செய்தார். கழுத்தில் மாலையுடன் அவர் சைக்கிள் ஓட்டியதைக் கண்ட தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். ஆனால், தொண்டர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், விஜய்யால் தொடர்ந்து சைக்கிளில் செல்ல முடியவில்லை. இதனால் மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறி மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

காரைக்குடி காவல்துறையினர் விஜய் பிரசாரத்துக்கு பகல் 12 மணிமுதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். தற்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பிரசார திடலுக்கு விஜயால் வரமுடிந்தது. 

பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்

பிரசார திடலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரமாகக் காத்திருந்தனர். ஆனால், பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய், பொதுமக்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மதியம் 2:30 மணி வரை மட்டுமே காவல்துறை பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருந்ததால், கால தாமதம் கருதி அவர் பேசாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கால்கடுக்கக் காத்திருந்த தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *