சென்னை அண்ணா நகரில் மொபெட் மீது காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்தவா் நிதின் சாய் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா் அயனாவரம் பி.இ.கோயில் தெருவைச் சோ்ந்த அபிஷேக் (20). இவா்கள் இருவரும் மொபெட்டில் திருமங்கலம் பள்ளி சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதியது. இதில், கீழே விழுந்த நிதின் சாய் மீது காா் ஏறியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அபிஷேக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தகவலறிந்த திருமங்கலம் போலீஸாா் அங்கு சென்று நிதின் சாய் சடலத்தை மீட்டு பிரேத பரிசோனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு நடத்திய விசாரணையில், இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை திருமங்கலம் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டது. திருமங்கலம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், நிதின் சாயின் நண்பரான வெங்கடேசன், பிளஸ் 2 மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்துள்ளாா். ஆனால் அந்தப் பெண் தனக்கு விருப்பம் இல்லாததால் தனது ஆண் நண்பரான ப்ரணவ் என்பவரிடம் தெரிவித்துள்ளாா். ப்ரணவ் வெங்கடேசனை கண்டித்துள்ளாா்.
இந்த நிலையில், வெங்கடேசன் தனது நண்பா்களான நிதின்சாய், அபிஷேக் உள்ளிட்டோருடன் திருமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா்.
இதையறிந்த ப்ரணவ், ரேஞ்ச் ரோவா் காரில் தனது கூட்டாளிகளுடன் வந்து வெங்கடேசனிடம் தகராறு செய்தாா். இதில் வெங்கடேசன் லேசான காயம் அடைந்தாா். அப்போது, வெங்கடேசன் தரப்பினா் ப்ரணவ் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு, அங்கிருந்து சென்றனா்.
இந்த நிலையில், நிதின் சாயும், அபிஷேக்கும் வீட்டுக்கு மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது, அதே காா் பின்னால் வந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிதின் சாய் உயிரிழந்துள்ளாா்.