மண் அகலில் திரியிட்டு நல்லெண்ணை விட்டு விளக்கேற்ற வேண்டும். இந்த நாளில் பரிகாரங்களுக்கு உகந்த இலுப்பை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. முதலில் பூஜை அறையில் உள்ள குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு பூக்கள் சமர்ப்பித்து தீபலட்சுமியே இதில் எழுந்தருள்வாயாக என்று மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அதற்கு தீபம் காட்டி வழிபட்டு ஒரு வெற்றிலை பாக்கு பழம் ஆகியன நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு அகல் விளக்குகளை அந்த தீபத்தில் இருந்து ஏற்றினால் விசேஷம். அல்லது ஒரு அகலை குத்துவிளக்கில் இருந்து ஏற்றிவிட்டு அந்த அகலைக்கொண்டு பிற விளக்குகளை ஏற்ற வேண்டும். விளக்குகளை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே வைக்க வேண்டும். தெற்கு நோக்கி வைக்கக்கூடாது.

தீபம் ஏற்ற நல்ல நேரம்
தீபம் ஏற்ற விளக்குகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டவுடன் நாமும் நம் வீட்டில் தீபம் ஏற்றலாம். இன்று திருவண்ணாமலையில் தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட இருக்கிறது. அதை தரிசனம் செய்தபிறகு நம் வீட்டில்தீபம் ஏற்றலாம். 6-7 மணி வரை சூர்ய ஹோரை. 7- 8 மணி வரை சுக்ரஹோரை. இந்த இரண்டு மணி நேரமுமே மிகவும் நல்ல நேரமாகத் திகழ்கிறது. இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் இறையருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளமும் சேரும்.
பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு நிவேதனம் உண்டு. கார்த்திகைக்கு, கார்த்திகைப்பொரி எனப்படும் நெல்பொரி நிவேதனம் செய்வது விசேஷம். பொரி உருண்டை நிவேதனம் செய்தால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.