ராம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் புரான்பூர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை பஞ்சாப் மாநிலத்துக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமை இரவு ராம்பூர் புறவழிச்சாலையில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் ஆம்புலன்ஸ் சேதமடைந்ததைத் தொடர்ந்து வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடல்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வித்யாசாகர் மிஸ்ரா கூறுகையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள மார்கி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையின் கூட்டுக்குழுவினர் அந்த பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பதிலடியாக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர், பின்னர் அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.