ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு
ஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. அன்மோல் பிஷ்னோய் மட்டுமல்லாமல், பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு கிரிமினல்களும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விமானம் இந்தியாவிற்காக கிளம்பி விட்டது.

இன்று டெல்லி வருகை
அந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து அன்மோல் நாடு கடத்தப்பட்டதை கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீசான் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசு இதுபற்றி அவருக்கு மெயில் அனுப்பியதாகவும், அன்மோல் பிஷ்னோய் டெல்லியில் இறங்கியவுடன் மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்றும் ஜீசான் சித்திக் தெரிவித்துள்ளார்.
மும்பை போலீஸார் அன்மோல் பிஷ்னோயை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இரண்டு முறை அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அவன் இந்தியாவிற்கு வந்தவுடன், எந்த விசாரணை ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அன்மோல் பிஷ்னோய் கனடாவிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரது கைது மற்றும் நாடு கடத்தல் பல முக்கிய வழக்குகளில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்மோல் மீது மும்பை, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.