நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசிடம் விளக்கம் பெற எதிா்க்கட்சிகள் தயாராகி வருவதால், கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.