தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், “நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு” என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில், நீதித் துறையின் ஊழல் குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இருந்தது.
சமூக அறிவியல் புத்தகத்தை பதிப்பதற்கோ வெளியிடுவதற்கோ தடை விதித்து தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. மேலும், இப்புத்தகத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பொதுவெளியில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க என்சிஇஆர்டி இயக்குநருக்கும் பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இத்தகைய செயலுக்குக் காரணமானவர்கள் மீது ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூடாதென நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது என என்சிஆர்டியின் முன்னாள் பேராசிரியர் பங்கஜ் புஷ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது மாணவர்களுக்கு நீதித்துறை குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தும். இப்புத்தகத்தை மறுஆய்வு செய்து உரிய திருத்தம் செய்யவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பங்கஜ் புஷ்கர் கூறியுள்ளார்.
