குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! மத்திய பாஜக மீது ஸ்டாலின் சாடல் – Kumudam

Spread the love

தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சனிக்கிழமை (நவ.29) காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம்.

ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசின் வஞ்சகத்திற்குக் கண்டனம்!

பிரதமர் நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும்.
கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தந்திடுக!

கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்!

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றிடுக!

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்திடுக!

கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி ரூ.3548.22 கோடிசமக்ர சிக்ஷா நிதியை உடனே விடுவித்திடுக!

மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது!

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம்.

பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக.

கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிடுக! ஆகிய 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிமிர்ந்து நடைபோடுவோம் முதல்வர்ஸ்டாலின் 

எம்பிக்கள் கூட்டம் தொடர்பாக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?தமிழ்நாட்டின் கோரிக்கைகளை – தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *