சுவாமி சந்நிதிக்கு இடப் புறத்தில் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள் அம்பிகை. தாமரைப் பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் சதுர்புஜ நாயகி இவள். அம்பாளின் கரங்கள் சற்றே வித்தியாசமானவை.
வலதுமேல் கரத்தில் கெண்டி, இடதுமேல் கரத்தில் ஜப மாலை, வலது கீழ்க்கரம் அபய ஹஸ்தம், இடது கீழ்க் கரம் ‘ஊரு ஹஸ்தம்’ (தொடை மீது ஊன்றியபடி) கொண்டு காட்சி தருகிறாள்.
அம்பாளின் திருப்பாதங்களைக் காண்கிறோம். வலப்பாதத்தை, இடப்பாதத்தை விட லேசாக முன்னால் வைத்து, பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறாள் அம்பிகை.
ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் அம்பாள் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் அருள்பீடங்களில் ஒன்றாகவும், மந்திர பீடமாகவும் திகழ்கிறது இது. இதனாலேயே, அம்பாளுக்கு மந்திர பீடேஸ்வரி என்றொரு திருநாமமும் உண்டு.

இந்தக் கோயிலில் பிள்ளையார் நவநீத விநாயகராகவும் அருள்கிறார். துர்வாசர் அளித்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாம் காமதேனு அம்பிகையின் இடப்புறம் கணபதியை பிரதிஷ்டை செய்தது.
தனது குளம்புகளால் தோண்டி தீர்த்தம் வரவழைத்தது. கணபதியையும், அம்பாள்- சிவனையும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டது. அதனால் விரைவில் பலன் கிடைத்து சாபவிமோசனம் பெற்றது. அந்த மகிழ்ச்சியில் தனது பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து கணபதியின் திருமேனியில் பூசி வழிபட்டது காமதேனு என்கிறது தலபுராணம்.
இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, அம்பிகையையும் அப்பனையும் வழிபட்டால், எல்லா வித தோஷங்களும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.
வேட வடிவம் தாங்கி, அமுதக் கலசத்தை வில்லால் அடித்து உடைத்தாரே, அந்தச் சிவனாரின் வடிவமே கிராதமூர்த்தி. நவநீத விநாயகருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, கிராதமூர்த்தியை வணங்கினால், மகப்பேறு இல்லாதவர்களுக்குக் கட்டாயம் மகப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கே ஈசனுக்குப் பௌர்ணமி தோறும், புனுகுச் சட்டம் சார்த்தப்படுகிறது. கும்பேஸ்வரரை வழிபடும் அன்பர்களுக்கு, நோய்நொடி இல்லாத நீண்ட ஆயுளும், யோகங்கள் கூடிய வாழ்வும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கும்பகோணம் செல்லும் பக்தர்கள் தவறாமல் ஆதி கும்பேஸ்வரரைத் தரிசித்து வாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும்.