”கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!” என்று விரட்டினார் கரும்பு வியாபாரி.
விநாயகரும், ‘கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்’ என்று சொல்லி சிரித்தார்.
அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட… அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர்.
சிறுவன் போன இடம் தெரியாமல் தவித்த வியாபாரி களைத்துப்போய் தன் கரும்புக் கடை இருந்த இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ந்துபோனான்.

வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் விநாயகர் அதற்குள் உறிஞ்சியிருந்தார். கரும்புகள் சக்கையாகக் கிடந்தன. கலங்கிப் போனார் வியாபாரி.
நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், ‘ஒரேயொரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார்.
பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக்காகக் கொண்டு வந்த அத்தனை கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார். இந்த முறை கரும்புகள் முன்னைவிட சத்தாகவும் சுவையாகவும் மாறின.
விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகை பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் ‘கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று.
இந்த விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. மக்கள் கூட்டம் அந்த நாளில் மிகுந்திருக்கும். மேலும் வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து வழிபடுகிறார்கள் அதைக் கண்டாலே வாழ்க்கை வளமாகும், பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
குடந்தை செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரைத் தரிசித்து வாருங்கள். சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்னைவிட சுவையாகச் சத்தாக மாறியதுபோல் சுவாரஸ்யமில்லாமல் கழியும் வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை.