திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சுதாகர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளரான டி.ஜெ.கோவிந்தராஜன், வேட்பு மனுவை தாக்கல் செய்ய கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். பின்னர் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர், கட்சியினருடன் அங்கு வந்தார்.
இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது அ.தி.மு.க வேட்பாளர் சுதாகர், மரியாதை நிமித்தமாக தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜனுக்கு `அண்ணே… வணக்கம்” என்று கையெடுத்து கும்பிட்டார்.
பதிலுக்கு கோவிந்தராஜனும் வணக்கம் செலுத்தியபோது திடீரென சுதாகர், தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜனின் காலில் விழுந்து `அண்ணே என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க’ எனக் கூறினார். அதனால் பதறிப் போன கோவிந்தராஜன், அவசர அவசரமாக சுதாகரரை தூக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

இந்தக் காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர். மேலும் தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்த சம்பவத்தைப் பார்த்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வேட்பாளர் சுதாகரிடம் சீனியர் நிர்வாகிகள் கேள்வி கேட்டதற்கு, தி.மு.க வேட்பாளர் என்னை விட வயதில் பெரியவர், அதனால் மரியாதை நிமித்தமாக காலில் விழுந்துவிட்டதாக பதிலளித்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தி.மு.க வேட்பாளர் காலில் விழுந்த அ.தி.மு.க வேட்பாளர் சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகியது. தி.மு.க வேட்பாளரிடம் அ.தி.மு.க வேட்பாளர் சரண் அடைத்து விட்டதாகவும் சிலர் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதற்கு கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க-வினர், “தி.மு.க எங்களுடைய பரம எதிரி. அந்தக் கட்சியின் வேட்பாளரின் காலில் எங்கள் கட்சி வேட்பாளர் சுதாகர் காலில் விழுந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதாகர், ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். அதைப் போல தி.மு.க வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனின் குடும்பத்தினரும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்கள். அதனால் இருவருக்கும் பிசினஸ் டீலிங் இருக்க வாய்ப்புள்ளது. மரியாதை நிமித்தமாகவே காலில் விழுந்ததை சிலர் அரசியல் செய்கிறார்கள்” என்றனர்.