கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார்.
சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என அந்த நிறுவனம் கேரளா முழுவதும் விளம்பரம் செய்திருந்தது.
அதற்காக அந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும், ஆன்லைன் ஏலம் மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு சேவ் பாக்ஸ் நிறுவனத்தின் காயின்ஸ்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
குறைந்த விலையில் பொருட்கள் வாங்கும் ஆசையில் சேவ் பாக்ஸ் ஆப் மூலம் பலரும் பணம் செலுத்தி காயின்ஸ்கள் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த நிறுவனம் தெரிவித்தபடி பொருட்களை வழங்காமல் மோசடி செய்தது. அந்த நிறுவனம் மீது பலரும் புகார் அளித்தனர்.

சேவ் பாக்ஸ் நிறுவன மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின்பேரில் திருச்சூர் கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2023-ம் ஆண்டு ஸ்வாதி ரஹீம் கைது செய்யப்பட்டிருந்தார்.