தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழைபெய்து வருகிறது.
பலத்த மழை
கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது கன மழை கொட்டி வருகிறது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. கோடை காலத்தில் அருகில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் இன்று(17 தேதி) காலை பழைய குற்றால அருவியில் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மலைப்பகுதியில் கனமழை கொட்டியது.
அருவியில் வெள்ளம்
இதனால் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. இதனை கண்ட அங்கு பாதுகாப்புக்கு நின்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை அருவியில் இருந்து வெளியேற்றினர். அவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
சுற்றுலா பயணிகள் அருவியை தாண்டி வந்து கொண்டு இருந்தபோதே கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
சிறுவன் பலி
இந்த திடீர் வெள்ள பெருக்கில் அருவியில் குளித்து கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கினானர். அவனை தண்ணீர் இழுத்து சென்றது. உடன் வந்தவர்கள் அவனை மீட்க முயன்றும் முயடிவில்லை. அவனை போலீசார் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் பழைய அருவியில் இருந்து சிறுது தூரத்தில் இன்று மாலை அஸ்வின் பிணமாக கரை ஒதுங்கினான். உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தை பார்த்து சுற்றுலா பயணிகள் பதறியடித்து வெளியே ஓடிவரும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.