குழப்பத்தில் கூட்டணி!
ஒரு பக்கம் காங்கிரஸ் பிரச்னைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அரவணைக்கும் வேலைகளையும் செய்துகொண்டிருந்தது திமுக. இப்போதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்றாலும், அமைச்சர்களை வைத்து ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் பேசிக்கொண்டிருக்கிறது திமுக. அதில் சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு வரை உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் போன்ற சில முக்கிய கட்சிகளுடன் இப்போதுவரை பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கவில்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.

இந்த விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “திமுக-வின் தொடர் வெற்றிக்கு எங்கள் கூட்டணிக் கட்சிகளின் பலம் மிக முக்கிய காரணம். எங்கள் கூட்டணியில் பெரியளவில் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியில் குழப்பம் என்ற பிம்பம் உண்டாவது எங்கள் கூட்டணிக்கு நல்லதல்ல. இந்த நிலையை உடனடியாக மாற்றியே ஆகவேண்டும் என்று கருதியது திமுக தலைமை. ஏற்கெனவே ஒருபக்கம் முதல்வரின் மருமகன் சபரீசன், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மூத்த அமைச்சர் வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து அனைத்தும் உறுதியாகிவிடும்.